[பிப்ரவரி மாத
தீராநதியில் வெளியான "கண்ணகியின் இன்னுமொரு முலை மிச்சமுள்ளது எனும்
தலைப்பில் வெளீயான கட்டுரைக்கு எதிர் வினை இது.]
அகத்தெழுச்சியின் பின் விளைவாக , நினைவு உள்ளத்தின் தாக்கம் இருப்பது போல் , நினைவிலி உள்ளத்தின் தாக்கமும் கொண்டு பிரவாகமெடுத்து
உடைப்பெடுத்து வருவதே கவிதை. 70களில் நிகழ்ந்த
புதுக்கவிதை சர்ச்சைகளுக்கு பின்பாக கவிதை
இசை வழியாக அன்றி கவிதை ஓவியக் கலையோடு
தொடர்புடையது என்றும் , அதனால் கண் வழியே புகுந்து அறிவு வழி உணர்வுகளை எழுப்புவது
என்றாகியிருந்திருக்கிறது. கவிதை வாசிப்பவர்களுக்கு காட்சி வடிவமாவது அப்படியிருக்க இன்றைக்கு நவீன
தமிழ் கவிதைகள் ( அந்த அந்த
காலத்திற்கு அது அது நவீனமே) என்று சொல்லப்பட்டுக் கொண்டிருகின்ற கவிதைகள் பொதுவாக எதைக் காட்சிப்படுத்துகின்றன. இது பெண் மொழி, உடல் மொழி என்று ஒரு சாராரை மட்டும் சுட்டு விரல் நீட்டும்
விசயமன்று மாறாக இன்று ஆண் பெண் பேதமின்றி ஒரு குழுவினரிடையே நிகழ்ந்து விட்டுருக்கின்ற உடலை மையப்படுத்துகின்ற உள்மன வக்கிரங்களை
கவிதையாக்குகின்ற தாக்கம் இன்று
கண்டனத்துக்குரியதாய் ஆகியிருக்கின்றது.
அதிர்வுகளுக்காக
எழுதுகிறோம் ஆண்களை நிலைகுலையச் செய்ய வேண்டியது அதிர்வுகளின் நோக்கம் என்று
சொல்லிக் கொண்டிருந்தவர்கள் அந்த
அதிர்வுகள் விட்டெறிந்த பந்தாய் திரும்பி அடிக்கவும் இன்று கவிதைகளில் வரும் அந்த
சொல் அதுவே அல்ல என்று சப்பைகட்டுகட்டத் துவங்கியிருக்கிறார்கள். போகவும்
இலக்கியம் கடல். கரையில்
நிற்கும் உங்களுக்கு வேண்டுமானால் இது அதிர்வாக இருக்கலாம். கடல் இது போல் எத்தனை
அதிர்வுகளை அமைதியாக மூழ்கடித்திருக்கிறது. அந்த சொல் பெண்ணுடைய உறுப்பா? கவிதைக்குள்
கட்டமையும் உருவகமா? என்று கேள்விகள் எழுப்புகிறார்கள். பெண் எழுத்து , பேசும் அரசியல்
அறத்தை(?) உள்ளடக்கிய
உருவகம் என்கிறார்கள். ஆணாதிக்க சிந்தனை வழிவந்தவர்கள் தான் (இது ஆணாகத்தான் இருக்க வேண்டுமென்று
அவசியமில்லை) பெண்ணுறுப்பை வசைச் சொல்லாகவும் , பெண்ணை உறுப்பாக
மட்டுமே பார்த்தனர் என்றால் அதைக் கட்டுடைத்து பெண் என்றால் உடல் மட்டும் அல்ல
என்று கட்டமைப்பதை விட்டு, நாங்கள் பேசும் அரசியல் அறத்தை(?) உரைக்கக்
கையாளும் உருவகத்திற்கு இந்த பிரபஞ்சத்தில் வேறு பொருளே இல்லையா? இல்லை இன்றைய
உடல் மொழி பேசும் கவிஞர்களுக்கு ( இதில் சில ஆண் கவிஞர்களும் அடக்கம்) மொழிப்
பஞ்சம் ஏற்பட்டு விட்டதா? காட்சி வடிவமாக்கி வாசித்து கொண்டிருக்கின்ற வாசகனுக்கு
வீட்டை பெண்ணாகவும் வாசலை பெண்ணுறுப்பாகவும் கற்பனை பண்ண செய்து தருவது சரியானதாய்
இருக்குமா?
சமுதாய மாற்றத்திற்கான வழிவகையை இது எங்காவது செய்து தருமா? நிச்சயமாக தரப்போவதில்லை.
மாறாக ஆணும் பெண்ணுமாக இவ்வளவு காலம் பெண்
என்பவள் உடல்
மட்டுமல்ல அவளுக்குள் இருக்கின்ற உரிமை மனிதனுக்கான உரிமை என்று நிலைநாட்ட போராடி நகர்த்திக் கொண்டு வந்தவற்றை எல்லாம்
சரித்து தள்ளி விடும். தொகுப்புக்கு தலைப்பிட்டு விடுவதாலேயே தமிழ் கூறும்
நல்லுலகத்து பெண்டிர் எல்லாம் தளையறுத்து சுபிட்சம் பெற்றிடக் கூடிய சமுதாய
மாற்றத்தை விளைவித்து விட்டார்களா என்ன? அம்மணமாய் திரிகின்ற ஊரில் கோவணம் கட்டியவன்
கோமாளி அப்படியிருக்க ஆடைகட்டிய ஊரில் நீங்கள் கவிதைகளை ஆடை அவிழ்க்கச் செய்வது
முறைதானா?
திரைப்படங்கள்
வெறும் பொழுது போக்கு அம்சம் மட்டுமே.
இலக்கியத்தை நீங்களே ஏன் அதோடு ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும். இலக்கியத்திற்கென்று
ஒரு பொறுப்புணர்வு உள்ளது .’ இலக்கியம் சமுதாய வரலாற்றுக்குரிய புற அமைப்பை அளிக்க
இயலும். இது
ரெனிவெல்லக்கின் கருத்து.. இதை உணர்ந்து பொறுப்புணர்வோடு இலக்கியம் பயணிக்க
வேண்டும். வெகுஜன ஊடகங்களில் சினிமா பாட்டெழுதுபவர்களும் கவியரங்க பிரபலங்களும்
விமரிசனத்தை முன் வைக்க முடியாது என்று எப்படிக் கூற முடியும். கவிதைக்கும்
இவர்களுக்கும் சம்பந்தம் இல்லையெனும் பதில் வேறு.
அப்போ கவிதை
எழுதுகிறவர்களுக்காகவும் சிறு பத்திரிக்கை வாசகனுக்குமாகவே உங்கள் கவிதை என்றால்
அது ஏன் அச்சிட்டு புத்தமாக்குகிறீர்கள்? எப்பொழுது உங்கள் எழுத்து கை பிரதியிலிருந்து
அச்சாகி வாசகனுக்கென வந்து புத்தகமாகி விடுகிறதோ அப்பவே அதை விமரிசிக்கிற உரிமை
எல்லா வாசகனுக்கும் பொதுவாகி விடுகிறதே.
சரியான
விமரிசகர்களும்,
விமரிசனங்களும்
இல்லாமல்தான் இன்று இலக்கியம் மேல்தட்டு மனோபாவத்தின் வெளிபாடாக அடையாளமாக
அலங்காரமாக மாறி வருகின்றது.
இதில் பெண் கவிஞர்கள் இப்போதான் எழுத வந்திருக்கிறார்கள் . அதனால் விமரிசனம்
செய்யக் கூடாது என்று விவாதம் வேறு. பெண் என்கிற உடல் சார்ந்த அடையாளத்தை
தொலைப்பதே பெண்ணுக்கான விடுதலையாக இருக்கும். விடுதலை பேசும் கவிஞர்களும் அந்த
அடையாளத்தை தாங்கி நிற்பது சரியல்ல. நீங்கள் எழுதாத ஆபாசத்தை எப்படி உங்கள்
கவிதைகளில் ஏற்றி, ஆபாச வக்கிரமென அவதூறு செய்ய இயலும். உதாரணமாக பாரதியின்
எந்த கவிதை வரிகளின் மேலாவது ஆபாச வக்கிரமென அவதூறு செய்ய இயலுமா? கவிதைகளில் இல்லாததை எப்படி ஏற்ற முடியும்?
நெருப்பு உருமாறி
அருட் பெரும் சோதியாகி நின்ற உருவகமே உங்கள் கவிதைகளில் வரும் சொல்லாடல் என்று
பொத்தாம் பொதுவாக நீங்கள் சொல்லி விட்டு
போவது இலக்கியப் புரட்டு என்று நாங்களும் சொல்லி விட ஏதுவாகி விடும் . அதை ஆதார
பூர்வமாக நிரூபணம் செய்வது அவசியம். செய்யாமல் சாக்தேய மரபில் வந்த கவி நானென்று
நீங்களே சொல்வதும் கேலிக் குரியதே.
எதையும் தனக்கு சாதகமாக அதே சமயம்
முரணானவற்றை கூறும் தன்மையும், தனக்கு தெரியாத விசயங்களை முற்றும் உணர்ந்தது போல் பேசும்
ஆதிக்க மனோ பாவமும் இவர் கட்டுரையெங்கும்
நிறைந்திருக்கிறது. தேவாரத்தில் வரும் சிவனை பற்றி பேசும் முன் அல்லது
சாக்தேய மரபில் வந்தவராக கூறும் முன்
சைவத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அவரது கவிதைகளில் அவர் உருவகப்படுத்தும்
சொல்லாடலை சாக்தேயத்தின் குறியீடாக பாவிக்கும் இவர் பக்தி இலக்கியத்தில் என்னத்தை
சாதித்து விட்டார். கலாச்சார பேரழிவு
ஆயுதங்களை வைத்திருக்கும் உடல் மொழி பேசும் கவிஞர்கள் முன் பாவம் உயிரை மட்டும்
வாங்கும் இரசாயன ஆயுதங்கள் எம்மாத்திரம். ஆங்கிலப் படத்தை
மொழியாக்கம் செய்தது போல் இருக்கிறது இவரின் திருவெம்பாவை விளக்கம். ஆண்களால்
இயற்றப்பட சைவ மரபை பேசும் பாடல்களை
சாக்தேய மரபுக்கு எப்படி துணைக்கிழுக்க முடியும். மற்றவர்களை மத அடிப்படை
வாத கவிஞர்கள் என அடையாளம் காட்டும் இவர் எதன் அடிப்படையில் தன்னை மட்டும் சாக்தேய
மரபுக் கவி எனும் மத(மரபு)
போர்வைக்குள் மறைத்துக் கொள்ளுகிறார். கள்ளுண்ட
குரங்கு கண்ணுக்கெட்டியதையெல்லாம் தூக்கி எறிவதை போலவே உள்ளது இவரது தன்
கவிதை குறித்த விவாதங்களும் வீண் தம்பட்டங்களும். அதீதப் புனைவியல் மூலம் உலக
நடப்பியலிலிருந்து தப்பித்தலைத்தான்
இன்றைய உடல் மொழி பேசும் கவிதைகள் செய்து கொண்டிருக்கின்றன. சி. கனகசபாபதி
குறிப்பிடுவார் “உத்திகளையே பெரிசுபடுத்தி வாழ்வின்
எதார்த்தத்தை நிகழும் நிமிசத்தில்
துடிக்கும் வாழ்வின் சத்தியத்தை மறந்தோ துறந்தோ கலையுருவம் ஆக்குவது நல்லதல்ல.
உத்திக் காரர்கள் சித்து விலையாட்டுக்கள் செய்தால் அத்துமீறி அழிவு வினையாக
முடியும்...” இதை ஒவ்வொரு
படைப்பாளியும் உணர வேண்டும். தமிழ் இலக்கிய மரபும், பிற இந்திய
இலக்கிய மரபும்,
உலக இலக்கிய
மரபும் வாசித்து கற்றவர்கள் அல்லது கற்றதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நிகழ்
வாழ்க்கையும் வாசிக்கக் கற்றால் இன்றைய
வாழ்வின் சத்தியத்தை உணர்வார்கள். இலக்கியம்
வாழ்வோடு பயணப்பட வேண்டுமே அல்லாது . இலக்கியத்திற்காக வாழ்வு என் மாற்றுதல்
சரியாய் இருக்காது.
ஔவையார்
காமத்தைப் பேசினார் சரி. நீங்கள் குறிப்பிட்ட பாடல் எத்தனை பேருக்கு போய்ச் சேர்ந்தது இதுவே சாட்சியல்லவா? எதை
பேசுகின்ற கவிதைகள் காலம் தாண்டி மக்களால்
பேசப் பட்டு நிற்கின்றன என்பதற்கு . இருபத்தோராம் நூற்றாண்டுக்கு போவது பற்றி
எல்லாரும் பேசிக் கொண்டிருக்க, நாம் ஏன் பின்னோக்கி பயணிக்க வேண்டும் என்ற கேள்வியும்
எனக்குண்டு. எத்தனையோ ஔவையார்கள் எண்ணிக்கை அறிதியிட்டு கூற முடியாத நிலையில்
இருக்க இவர் எந்த ஔவையாரை தன் தரப்பு அநியாயங்களுக்கு சாட்சிக்கு அழைக்கிறார்.
அந்த அடிப்படையில் நான் கூறுவது இதுதான் “அவநம்பிக்கைகளின்
மேல் பயணிப்பதை விட்டு வாழ்க்கையை
நம்பிக்கையின் மேல் பயணிக்க விடுங்கள்” பெண் கவிகள் பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக
எழுதுகிறார்களே இந்த கேள்விகள் மாற
வேண்டுமானால் பெண் என்பவளை உடல் உறுப்பாக
அடையாளைப்படுத்தும் ஆணாதிக்க பாசிசக் குரலுக்குள்ளிருந்து ஆண்கள் மட்டுமல்ல , பெண்களும் வெளிவர
வேண்டும்.
No comments:
Post a Comment