Thursday, June 25, 2015

இட ஒதுக்கீடு எதிர்ப்பு

உரை
அகில இந்திய ஷத்ரிய நாடார் சங்கத்தின் நிறுவனரும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கத்தினை ஒருங்கிணைப்பு செய்திருக்கும் வீரமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும்  வாழ்த்துக்களையும்  இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைபட்டிருக்கின்றேன். அகில இந்திய ஷத்ரிய நாடார் சங்கம் என்று சங்கத்தின் பெயரினை அழுத்தி உச்சரித்ததற்கு  காரணம் ஒவ்வொரு சங்க பெயருக்குப் பின்னால் இருக்கும் போராட்ட வரலாறுகள். நீ ஷத்ரியன், நீ சூத்திரன், நீ வைசியன், நான் பிராமணன் என்று சொல்லி சமூகத்தினரிடையே  பிரித்தல்களை ஒரு சமூகம் முன் வைத்த போது அதை எதிர்த்து  நீ மேலிருந்து பிறந்தாயா? நான் காலிலிருந்து பிறந்தேனா?  இதை சொல்வதற்கு நீ யார்? அப்படி கேள்விகளை எழுப்பி, ஷத்ரியன் என்ற சொல்லை சொல்ல  மாட்டேன் என்று நிராகரித்த  சமூகம் நம் சமூகம் தான். அதே சமயம் ஷ போன்ற வடசொல் உச்சரிப்புக்கள்தான்  இந்த மந்திரங்கள்தான் அவனை உயர்த்திக் கொண்டு போகின்றதோ அப்படியான நினைப்பைக் கொண்டு வந்து, ஏன் நானும் பிராமணன் போலவேதான். நானும் என் மக்களும் இந்த உச்சரிப்புகளை சொல்வோம். பழக்கம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்  என்பதனை உணர்ந்து,  ஷத்ரியன் என்கிற சொல்லைப் பழக்கணும் என்று ஒவ்வொரு அமைப்புக்குப் பின்னாலும் ஷத்ரியன் என்ற வார்த்தையை கொண்டு வந்து சேர்த்து அதனை ஒரு போராட்டமாக செய்ததும் நமது சமுதாயம்தான். ஒரு பேரைச் சொல்லலாம் சொல்ல வேண்டாம் இரண்டிற்கும் இடையிலேயே இந்த சமூகத்திற்கான சமுதாய வளர்ச்சியினை ஒரு அடித்தளத்தினை போட்டு காண்பிக்க முடிந்திருக்கின்றது என்பதனை இந்த பெயர்கள் கூட நிரூபித்து காண்பித்துள்ளது. 
முக்கியமாக இரண்டு விஷயங்களுக்கு வீரமணியை பாராட்ட வேண்டும். இட ஒதுக்கீடு எதிர்ப்பு  அப்படி நீங்கள் சொன்னால் நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஆட்களாக அடையாளப்படுத்தப்படுவீர்கள் அப்படியொரு அச்ச உணர்வும்,  அரசியலில் அதற்கு எங்களுக்கான இடம் இல்லாமல் போகும் என்ற பயமும்தான் பலரை சில இடங்களில் உண்மைகளை பேச விடாமல் செய்கின்றது. அதையும் தாண்டி இந்த தலைப்பில் அமைந்த  அழைப்பிதழை நான் முகநூலில் வெளியிட்டேன். வெளியிட்ட உடனே எனக்கு சில மணி நேரங்களில் நான்கு பேர் நீங்கள் எப்படி இந்த கூட்டத்திற்குப் போகலாம்? நீங்கள் பொதுஜனவாதி இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானவர் இல்லையே?  என்ற கேள்வியை முன் வைத்தனர். இவையெல்லாம் தாண்டி சில உரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக நின்று இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக வீரமணி  அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் கத்திரிக்காயின் விலை மட்டுமே பெண்களுக்குத் தெரியும் என எண்ணிக் கொண்டிருக்கும் ஆண்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையிலான பெண்களை அழைத்து கூட்டம் நடத்துவதற்காகவும் வீரமணி அவர்களை பாராட்ட வேண்டும். ஏனென்றால் சமுதாயத்தின் முதல் வளர்ச்சியானது பெண்களிடமிருந்தே தொடங்கியது. பெண்கள் கொடுத்த பிடியரிசியில்தான் காமராசரின் அரசியல் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  பெண்களினால் கொடுக்கப்பட்ட பிடியரிசியினால்தான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சாலைகளும் போடப்பட்டது. அப்படியானால் பெண்கள் அரசியலுக்குள் அரசியல் விஷயங்களை பேச முன் வந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் உண்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் மாறக்கூடிய வாய்ப்பு எப்பவும் இருக்கின்றது. அதனால்தான் பெண்களை எதுவும்  செய்ய விடாமல் வீட்டிற்குள் வைக்கின்றனர். நாங்கள் மட்டும் விஷயங்களைப் பேசிக் கொள்கிறோம், நாங்கள் மட்டும் எங்களுக்குத் தேவையான விசயங்களை செய்து கொள்கிறோம் என்பதல்லாமல் அதைத்தாண்டி, பெண்களை இவ்வரங்கத்திற்கு கொண்டு வந்ததற்கு வீரமணிக்கு இன்னும் ஒரு சிறப்பு பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம். .இன்று இந்த அரங்கத்தில் நாம் அனைவரும் பாரதீய கல்சூரி என்று  உச்சரிப்பதற்கு மிகவும் சிரமப்படும் ஒரு சங்கத்தின் பெயரினைக் கூறுகிறோம். பாரதீய கல்சூரி என்பது தமிழகத்தில் நாடார் போலவே மற்ற மாநிலத்திலும் பனைமரம், தென்னைமரம் இவற்றோடு தொடர்புடைய வணிகத்திலும் அதிக ஈடுபாடுகள் கொண்ட 30 இனங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும். மத்தியில் இருக்கும் அரசியல் அதிகாரங்களை பெறுவதற்கு ஒருங்கிணைந்து சமுதாய வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு உழைப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும்
. ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களும் கூட தமது சுய ஜாதி இனப்பற்றை மட்டும் வைத்துக் கொண்டு இருக்காது தன்னுடைய சுய ஜாதியையும் சேர்த்து அதற்கு கீழாக யார்யார் எல்லாம் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கும் சேர்ந்ததான பணிகளையே செய்து கொண்டிருந்தனர். நாம் நன்றாக கவனித்தால் கல்வி, படித்தால் ஒருவன் முன்னுக்கு வந்திடலாம் படிப்பு ஒன்றே அனைவரிடமும் போட்டியிட தகுதியை உருவாக்கும் என்பதை அறிந்து திரும்ப திரும்ப கல்வியின் தேவையை உரைத்துக் கல்விச் சாலைகளை கொண்டு வருகின்றனர். அதுவும் சாதாரணமாக அல்லாமல் தனி நபரினால் பள்ளிகள் அமைக்க முடியாது என்பதனை அறிந்து ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வாரிசுகள் இல்லாத தம்பதியினரின் சொத்துக்களை கையகப்படுத்தி அவர்களின் பெயரில்  பள்ளிக்கூடங்களை அமைத்தனர். 1910ல் நமது நாடார் மகாஜன சங்கம் அறிவித்த சட்டம் இது. இது கேட்பதற்கு சாதாரணமாக இருப்பினும் இதுவே ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிக்கூடம் உருவாக காரணமாக அமைந்தது. அதைத்தவிர ஒவ்வொரு இடத்திலும்  ஒடுக்கப்பட்ட அடிவாங்கும் இனமாக நாங்கள் இருக்கிறோம் என்பதை தலைவர்கள் உணர்ந்து  இந்த இனத்தை பலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். பலப்படுத்துவதற்காக நந்தவனங்களைக் கொண்டு வருகின்றனர். ஒரு அடிப்படையில் மட்டுமே எந்த முன்னேற்றமும் வந்து சேரவில்லை. பல்வேறு அடிப்படைகளிலேயே இந்த முன்னேற்றம், நாம் வாழுகின்ற வாழ்க்கை வந்து சேர்ந்திருக்கின்றது. நந்தவனம் மட்டுமின்றி தினமும் குளித்து உடற்பயிற்சி செய்தல் முதற்கொண்டு  எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு வருகின்றனர். அதற்குப் பின் அவர்கள் கொண்டுவரும் மிகவும் முக்கியமான செயல்பாடு மகமை. இந்திய அரசிற்கே முன் உதாரணமாக  எப்படி வரி வசூலிக்கலாம் என்பதை தந்தது, சுயநிதிக் குழுவினை அமைத்து எவ்வாறு சுய தேவையினை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதனை ஆரம்பத்திலேயே துவக்கிய துவக்கப்புள்ளி நாடார்களே. அப்படியொரு யாருமே செய்திடாத ஒரு செயலின் மூலம்  எல்லாரும் சேமித்தனர். மற்றவர்கள் சேமித்ததை நெல்லு கலத்தினுள்ளும், சுவரினுள்ளும், பூமியிலும் வைத்தனர் ஆனால், சேமிப்பை பொதுவான ஒரு  மகமையாக கொண்டு வர வேண்டும் என்பதனை நாடார்களே முதன்முதலில் செய்து காண்பிக்கின்றனர். சல்லிக்காசினை முதன் முதலில் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். விளக்கேற்றுதல் எனக்கூறி இதுதான் நம் தெய்வம் இதற்கு சல்லிக்காசு கொடுக்க வேண்டும் எனக்கூறி வாங்கி சேமிக்கின்றனர். இந்த சல்லிக் காசினில் 350 ரூபாய் சேர்ந்தவுடன் தெற்கு மதுரையில் ஒரு பள்ளிக்கூடத்தினைத் தொடங்குகின்றனர். இதுமட்டுமல்ல இன்று நாம் பெரிய கட்சிகள் என்று சொல்லப்படும் திராவிட பாரம்பரியங்கள் அவர்கள் கொண்டாடுகின்ற யாவுமே புத்திஜீவிதமான எல்லா விசயங்களுமே நாடார் வரலாற்றிலிருந்தே பெறப்பட்டவையாகும். வேற எந்த இனமும் இந்த அளவுக்கு எடுத்துக் கொடுக்கவில்லை.  ஏனென்றால் எப்பவும் நான் ஒடுக்கப்பட்டவன்  நான் அதிலிருந்து வெளிவர வேண்டும் யாரையும் எதிர்பார்க்காமல் வெளிவர வேண்டும் என்பதனை யோசித்துக் கொண்டே இருப்பவனாக நாடான்  இருந்தான். அவனுடைய  செயல்பாடுகள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு உதாரணமாக மாறிப் போய்விடுகின்றன. சீர்திருத்த திருமணங்கள் இது குறித்து பெரியார்  மற்றும் பிற அமைப்புகளோ பல்வேறு கோணங்களில் பேசிக் கொண்டு இருக்கின்றது. இது எல்லாவற்றிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொடுத்தது நாடார் இனமே ஆகும். நாடார் வீடுகளில் நடைபெறும் திருமணங்களை எந்த பிராமணனும் செய்து வைக்கவில்லை.   எனக்கான திருமணத்தை நானே செய்து கொள்வேன்  எனக்கான கோவிலை நானே கட்டிக் கொள்வேன்  என்ற உறுதியுடன் வாழ்ந்தனர். உன்னுடைய விதிமுறைகள் தேவையில்லை எனக்கூறி  கோவில் நுழைவு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில்  ”உங்கள் கோவில் எனக்கு வேண்டாம் என் பத்திரகாளி தெய்வத்திற்கு நானே கோவில் கட்டிக் கொள்கிறேன்”  அப்படியாக தனக்கான ஒரு முறையைக் கொண்டுவந்து அடிப்படைப் பின்னணியைக் கொடுத்தது நாடார் இனம்தான். அப்படிப்பட்ட இடத்திலிருந்துதான் இடஒதுக்கீடு எதிர்ப்பு என்ற கருத்தரங்கத்தினை வீரமணி அவர்கள் கொண்டுவந்திருக்கின்றார்.  இந்த வார்த்தைக்குப் பின்னால் அவர் என்ன அர்த்தம்  கொண்டிருக்கின்றார் என்பது ஒருபுறம் இருக்கட்டும் என்னைப் பொறுத்தவரை நான் இதை எப்படி பார்க்கிறேன்  இந்த இட ஒதுக்கீடு எங்களுக்கு என்ன செய்திருக்கின்றது? செய்யப் போகின்றது என்பதனை இந்த சமயத்தில் நான் உங்களுடன் பேசுவதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்.அம்பேட்கார் அவர்கள் சமூக நீதியை பேணும் பொருட்டு ஏற்றத் தாழ்வுகளை   அகற்ற ஒடுக்கப் பட்ட இன மக்களுக்கான வாழ்வியல் நீதியை உருவாக்க இடஒதுக்கீடு முறையை கொண்டு வந்தார். கொண்டு வரும் போதே 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்ற பரிந்துறையையும் செய்திருந்தார். ஆனால் நடந்தது என்ன? அவர் பரிந்துரைப்படி எதுவும் நடைபெறவில்லை 65 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தியாவைப் பொருத்தவரை ஒரு இடத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு இனம் வேரு ஒரு பிரதேசத்தில் வாழ்வியலுக்கு போராடுவதாக அமைந்திருக்கின்றது என்பது உண்மை. பிறப்பின் அடிப்படையிலேயே இன்னமும் சலுகைகள் வழங்கப் பட வேண்டுமா? தேவைகளின் அடிப்படையில்  அவை வழங்கப் படுவது பற்றி பரிசீலனை பண்ணினால் என்ன?
மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த வகையான சமூக, வர்க்க , பொருளாதார மனித சிக்கல்களையும் சேர்த்து கணக்கெடுக்கின்றதா?
தவழுகின்ற பிள்ளை நடக்கக் கற்றபின் அதற்கான ஆனவ விசயங்களை செய்யவேண்டுமே அல்லாது தவழ்ந்தால்தான் சலுகைகள் கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடக் கூடாது.
இன்றைக்கான அரசியல் சாதிய ஓட்டு வங்கி அடிபடையிலானது என்றான பின் எல்லா இன தலைவர்களும் எங்கள் இனம் பிற்படுத்தப் பட்ட நிலையில் இருக்கின்றது என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் 1920 களில் ஒவ்வொரு ஒடுக்கப் பட்ட இனத் தலைவர்களும் எங்கள் இனமும் தாழ்த்தப் பட்ட இனமில்லை என்று சொல்ல முன்வந்தார்கள். ஆனால் இந்த தலைவர்கள் நிஜமாகவே தவழும் நிலையில் உள்ள சமூகம் நடப்பதற்கு எப்படி என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்கு  ஒரு துவக்கப்புள்ளியை இந்த கருத்தரங்கில் வலியுறுத்த விரும்புகின்றேன்
. நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சாதிய ஒடுக்குமுறை குறித்தும் சாதி அடிப்படையில் எங்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் அரசு சலுகைகள்  அளிக்கப்படுகிறது என்று சொன்னால் கேட்பவர்கள் சிரிப்பர். ஏனென்றால்  ஒருவன் இந்த இனத்தில் பிறந்தேன் என்பதற்காக சலுகையை வாங்கக்கூடாது. நான் சலுகை பெறுவதற்குத்தகுதி உடையவனாக இருக்கிறேனா என்பதுதான் முக்கியம். இன்று தமிழகத்தில் என்ன மாதிரியான செயல்பாடு  இருக்கின்றது என்று நாம் நினைத்து பார்த்தோமானால்   1998க்குப் பிறகே சரியான முறையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட வில்லை. மக்கள் தொகைக் கண்க்கெடுப்பு எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் எடுக்கப்பட வேண்டிய விசயம் அன்று. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இந்த சமுதாயத்தில் யார் யார் இருக்கிறார்கள் அம்மக்களுக்கு என்ன தேவை எந்த இன மக்கள் கஷ்டப்படுகிறார்கள் எந்த மக்களுக்கு வாழ்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்பதை அறிதல். இதுவரை படிக்காத குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதன் முதன் முதலில் பட்டம் பெறும் பொழுது அவனது சூழ்நிலை என்னவாக இருக்கும், படித்து வளருகின்ற குடும்பத்தில் பிறந்த குழந்தைகள என்னவாக இருக்கிறார்கள்  இவ்வாறான பல்வேறு விசயங்களை உள்ளடக்கியதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைகின்ற பொழுதுதான்   அதனை அடிப்படையாகக் கொண்டு அதன்பின் மக்கள் நலத்திட்டங்களை உருவாக்க முடியும்.
. தொகைக் கணக்கெடுப்பினை எடுக்கும் பொழுதே இந்த விஷயங்களை தெளிவாக எடுத்தால் இது ஒரு அடையாளத்தினைக் காண்பிக்கும். ஒரு இடத்தில் ஒரு தொகுதியில் இத்தனை மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கின்றார்கள். கஷ்டப்படுபவர்களாக இருக்கின்றனர் இவர்களுக்கு இந்த சலுகை தேவைப்படும்.. இதுவே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம். இட ஒதுக்கீடு என்பது இடம் இருப்பதனால் கொடுப்பது அன்று யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு போய்ச் சேர வேண்டும். மருத்துவகாப்பீட்டு என்பது யாருக்காக கொடுக்கப்பட்டது என்றால் யாருக்கு மருத்துவவசதி தேவைப்படுகிறதோ யாரால் சுயமாக மருத்துவம் செய்து கொள்ள முடியாதோ அவர்களுக்கு அரசால் வழங்கப்படுவது. அரசு பணம் என்றால் அது நம் வரிப்பணம் தான் அரசு என்றால் அது நாம்தான். நம்முடைய வரிப்பணம்தான்.
மக்களின் வரிப்பணம்தான் அரசாங்கத் திட்டங்களாக மாறுகின்றன. அந்த  திட்டத்தினை வாங்குபவன் நிஜமாகவே அந்த திட்டத்திற்கு தகுதியுடையவனாக இருக்கின்றானா ன்ற கேள்வி எல்லார் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது. நான் உதாரணத்திற்குக்  மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைக் கூறினேன். பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு மற்றும் வேறுவகையான  நிறுவனங்களின் ஒதுக்கீடு  வெறும் ஜாதி அடிப்படையில் மட்டும் முன்னிறுத்தப்படுமானால் தகுதி இல்லாதவனுக்கு ஒரு இடம் கொடுக்கப்படுமானால் அந்த இடத்தில் என்ன நடக்கும், ஒரு வேலை செய்து மதிப்பு பெற முடியாத குழந்தை குடும்பத்தில் அனைவரும் தன்னைப் பார்க்க அழுது புலம்பும் அதைப்போலவே தகுதி இல்லாதவனுக்கு அளிக்கப்படும் பதவி ஊழலுக்கான இடத்தை, திறமையின்மையை மறைக்கின்ற  ஊழலை உருவாக்கி தேவையற்ற எந்த ஒரு பயனும் இல்லாததாக மாறிவிடும்.  இட ஒதுக்கீடு என்ற விசயத்தை யாருக்குத் தேவை என்று தீர்மானிப்பவர் யார்? தீர்மானிக்கின்ற  இடத்தை உருவாக்குவதற்கு என்ன வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன இது நாம் முன் வைக்க வேண்டிய கேள்வி. இதைக் கூறியவுடன் ஒருவர் கேட்டார் இட ஒதுக்கீடே வேண்டாம் என்று நீங்கள் சொல்லிவிட்டால் காலியாகப் போவது உயர்வான வர்க்கமோ தாழ்வான வர்க்கமோ அல்ல இதற்கு இடையில் இருக்கும் மக்கள்தான். எனவே இதனை முற்றும் முடிவாக தூக்கிவிட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஒரு நாளும் செய்ய முடியாது என்பதே எனது கருத்தாகும். எந்த இடத்திலேயும் எல்லாரும்  ஒரே மாதிரியாக சமமாக இருப்பது இல்லை. நான் நினைக்கின்ற வேலையும் வீரமணி அவர்கள் செய்ய நினைக்கும் வேலையும் ஒரே விதங்களில் நடைபெறுவது இல்லை.  உதாரணத்திற்கு வீரமணி அவர்கள் இந்த கூட்டத்திற்கு இத்தனை பெண்களை கூப்பிட்டு வந்து சேர்த்துள்ளார். நான் அவ்வாறு கூப்பிட்டு வர முடியுமா? முடியாது அதாவது செயல்பாடுகள் என்பது வேறுபடும். நம் செயல்பாட்டிற்கு  ஏற்ற ஊக்கங்கள் தேவைப்படுகிறது. கல்வி அடிப்படை என்கின்ற போது எந்த சலுகையைச் சொல்லியாவது எல்லா சமுதாயத்திரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் முன் வைக்க வேண்டியுள்ளது. படிப்பினை  எந்த சமுதாயத்தினராக இருந்தாலும்  கற்க வேண்டும். ஆனால் வேலை வாய்ப்பு என்கின்ற போது அது சலுகை அடிப்படையில் என்று இல்லாமல் தகுதி அடிப்படையில் அமைதல் வேண்டும். பொது அடிப்படையில் என்கின்ற போது எல்லாவற்றையும் பொதுவான அடிப்படையில் செய்ய முடியாது 
 அப்படியானால் அவனுக்கான தகுதியைத்தான் முன் நிறுத்த வேண்டும். இத்தகுதியை ஒரே விதத்தில் தருவதற்கு இந்த அரசாங்கம் என்ன செய்கிறது என்ற கேள்வியினை இந்த கருத்தரங்கத்தின் வாயிலாக  முன் வைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இட ஒதுக்கீடு என்பதை உரக்க  எதிர்த்த  இயக்கம் அல்லது ஒரு இடஒதுக்கீடு என்ற உடன் தன் சுய ஜாதிக்கு எத்தனை ஒதுக்கீடு என்று இல்லாமல் அனைத்து ஜாதியினருக்காகவும் போராடிய ஒரே அமைப்பு நம் நாடார் அமைப்புதான்.  தோள்சீலை போராட்டம் நிகழ்ந்த பொழுது நாடார் பெண்கள் மட்டும் தோள் சீலை அணியக் கூடாது என்பது இல்லை 18 சமூகங்கள் மேல் சீலை அணியக்கூடாது. 18 சமூக பெண்கள் குறுக்காக தோள் சீலை அணியக் கூடாது என்று திருவவனந்தபுர அதிகாரிகள் எதிர்ப்பு அறிவிக்கின்றனர். இதனை எதிர்த்து ஐம்பது ஆண்டு காலம் போராடிய இனம் நம் இனம். அதிலும் பெண்கள்தான் இப்போராட்டத்தினை முன்னிறுத்தி நடத்துகின்றனர். ஒரு பெண் ராணிகள் எல்லாம் மேலாடையை அணிகின்றனர் அது அழகாக இருக்கிறது நாம் ஏன் போடக் கூடாது என நினைத்து ஒரு துண்டினை எடுத்து மேலே போடுகிறாள். அதைப் பார்த்த அக்காவலாளி நீ எப்படி துண்டு போடலாம் வந்து வரி கட்டிவிட்டுச் செல் என்றான். வரியினை வசூலிக்க அவன் வீட்டுக்கு வர அப்பெண்ணின் தந்தை தாய் இருவரும் வரி கொடுக்க முடியாமல் கதறி அழுகின்றனர். அந்த பெண் காவலாளியிடம் சென்று இந்த முலையை மறைக்கக் கூடாது என்றுதானே வரி கேட்கின்றீர்கள் இதோ எனது முலை எனக்கு வேண்டாம் கொண்டு செல்லுங்கள் என்று இலையில் அறுத்துக் கொடுத்தாள்.  இது மிகவும் முக்கியமான நிகழ்வு இதற்கு மேல் ஒரு பெரிய போராட்டத்தை எந்த இனமும் கொண்டிருக்க முடியாது. எந்த இனத்தோட பெண்களும் நடத்தியிருக்க முடியாது. இந்த போராட்டம் 18 இன மக்களின் போராட்டத்திற்கு உரியது. இன்று நாம் இந்த விசயங்களை எல்லாம் மறந்து இருக்கலாம். அப்படியானால் இந்த இட ஒதுக்கீடு கருத்தரங்கம் சுய ஜாதிக்காக, சுய சமுதாயத்திற்காக சலுகைகளை கோருகின்ற ஒரு கருத்தரங்கம் அல்ல.  இளம் சமுதாயத்தினர் ஒதுக்கீடு குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கின்றது அது குறித்த துவக்கப்புள்ளியைத் துவங்கியிருக்கின்றது என்பது மிக முக்கியமான ஒரு செயல்பாடு ஆகும். இச்செயலினை ஆற்றியதற்காக வீரமணி மற்றும் உடனிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பேசியது எனக்கு உற்சாகமாக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக நாங்கள் என்ன செய்யப் போகிறோம். இந்த இட ஒதுக்கீடானது அனைத்து சமுதாயத்திலும் தகுதி அடிப்படையில் மட்டுமின்றி தகுதியும் ஒரு அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அதுவே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கும் என்றால் என்ன செய்யலாம். கர்நாடகாவில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை காலி செய்து விட்டதாக கேள்விப்பட்டேன் அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கெடுப்பை சமூக பொருளாதார சாதிய  பொருளாதார அடிப்படையில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கப் போகிறோம். இந்த காலகட்டத்தில் ஜாதியிலிருந்து வெளியே வரப் பார்க்க வேண்டுமே அல்லாது ஜாதியை காரணமிட்டு ஏற்றத் தாழ்வுகளை வளர விடக் கூடாது. ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியினரை குறைவாக  மதிப்பிடுதலும் தன்னுடைய ஜாதிதான் உயர்வானது என்று நினைப்பதும் பிரச்சனைக்கு அடிப்படை ஆகும். 

ஜாதி பிறப்பினால் மட்டுமல்ல எங்கேயோ அவனுக்கு வாழ்வியல் சூழல் வசதியினைத் தரவில்லை. வாழ்க்கையின் எல்லாவற்றையும் பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்பதே. அரசாங்கத்தின் வேலை என்ன மக்களுக்குரிய வரிப்பணத்தைக் கொண்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகளை கல்வி, இருப்பிடம், வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இவற்றை நிறைவேற்றுதல். அப்படி அவர்கள் அந்த பொறுப்பை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள். என்பதை பேசாமல் இருப்பதை விட பேசத் தொடங்கியிருப்பது நல்ல விசயம் என்று கருதுகிறேன்.  முற்காலத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை சமுதாயத்தின் வாழ் நிலை மாறும் என்று சொல்வார்கள். முன்பு காலத்தில் இராமநாதபுரம் தஞ்சாவூர் மாதிரி முப்போகமும் நெல் விளையும் என்று சொன்ன வரலாறுகள் இருக்கின்றன. பிறகு இராமநாதபுரத்தினை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கூறும் சூழ்நிலையும் வந்தது. 60 வருடங்களுக்கு ஒருமுறை காலங்கள் மாறிக் கொண்டு இருந்தது. ஆனால் இன்றைக்கு அவ்வளவு தாமதமாக  இல்லை. நேற்று இருப்பது போல் இன்று இருப்பது இல்லை சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது. மக்களின் தேவை மாறிக் கொண்டு இருக்கிறது. முன்பு மக்களின் விவசாயம், நெசவு, மண்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற வாழ்வியல் சார்ந்த தொழில்களே இருந்தது இன்று வாழ்வியல் சார்ந்த விசயங்களில் கார் முக்கியமானதாக மாறி விட்டது, செல், கணினி   அனைத்து தேவைகளின் முன் இடத்தை ஆக்கிரமிக்கின்றது. சாப்பிடாமல் நாம் இருந்தால் கூட  இவைகளில்லாமல் நம்மால் இருக்கமுடியவில்லை. அப்படியானால் இதுவே நம் வாழ்வியலைத் தீர்மானிக்கின்றது. இதிலெதை ஒருவன் கைக் கொள்கின்றானோ அவன் அதில் உச்சத்திற்குப் போய்க் கொண்டு இருக்கின்றான். புதியதாக அவன் என்ன செய்துகொண்டு இருக்கின்றான் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. முகநூலில் ஒருவன் எழுதியிருந்தார் ஒரு மரத்தில் மாம்பழம் அதிகம் காய்த்திருந்தது நான் 7 சாக்குகள் கட்டிக் கொண்டு போனேன் கிலோ 2 ரூபாய்க்கு வாங்கிக்கவில்லை வைத்துவிட்டுப் போ வித்து 2 நாட்கள் கழித்து கொண்டு வந்து தருகிறேன் என்றான். ஆனால் அவன் கிலோ 60 ரூபாய்க்கு விற்கின்றான். அப்படியானால் எங்கே  வாழ்வியல் தேவை எவனொருவன் கஷ்டப்படுகின்றான் யார் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இதை எல்லாம் கணக்கில் எடுத்துவிட்டு அதற்குப் பின் இட ஒதுக்கீடுகளைப் பற்றி பரிசீலனை செய்யலாம். இப்போது ஒரு வீட்டில் வசித்தோமானால் அதனை நாம் தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டேதான் இருக்கப் போகிறோம். இன்று  சுத்தம் செய்து விட்டேன் இனிமேல் சுத்தம் செய்யத் தேவையில்லை என்று கூறப் போகின்றோமா முடியாது. இன்று சாப்பிட்டு விட்டேன் என்று அடுத்த வேளை சாப்பிடாமல் இருக்கப் போவது இல்லை. அரசாங்கம் 65 வருடங்கள் சும்மா இருந்திருக்கிறது என்பது மிகவும் மோசமான விசயம். அந்த விசயத்தை சுட்டிக் காட்டுவதற்காகத்தான் வீரமணி அவர்கள் இந்த கருத்தரங்கை உருவாக்கி இருக்கின்றார்.  இது தொடர்ந்து பேசுவதற்குரியதாக நீங்கள் இந்த புள்ளியிலிருந்து கொண்டு செல்ல வேண்டும். இதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன நான் என் அனுபவம் சார்ந்த கருத்துக்களை முன் வைத்து இருக்கின்றேன். ஆனால் அனுபவம் இடத்திற்கு இடம் வாழ்வியலுக்கு வாழ்வியல் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் உங்களுடைய அனுபவம் சார்ந்த விசயங்களுடன் இதை சேர்த்து  செயல்களில் ஈடுபடுங்கள். இன்று ஏற்கனவே இருக்கின்ற அரசியல் வாதிகள் என்னவெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து பார்க்காதீர்கள். படம் காண்பிக்கின்ற வேலையே வேண்டாம். எதை நாங்கள் செய்யப் போகிறோம், இல்லை இதை நாங்கள் தொடங்க அருகதை இருக்கிறதா என்ற  கேள்வியை கேட்காதீர்கள் எங்கே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே தொடங்கி விடுங்கள். அப்படியான தொடக்கத்தை துணிச்சலாக தொடங்கியிருக்கும் வீரமணி அவர்களை மறுபடியும் பாராட்டி இந்த சந்தர்ப்பத்தில் மறுபடியும் உங்களோடு எனக்குத் தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. அதோடு பெண்கள் பலர் இங்கு சமையல் செய்ய வேண்டும், காயப்போட்ட துணியை எடுக்க வேண்டும் என்ற நினைப்போடு அமர்ந்திருப்பது எனக்குத் தெரிகிறது. ஒவ்வொரு பெண்களின் தலையிலும் இரு குடும்பப் பொறுப்பு இருப்பதை நான் அறிவேன். ஆனால் சில சமயங்களில் சில விசயங்களை இழந்துதான் ஆக வேண்டும். தப்பில்லை ஏனென்றால் பெண்கள் சிலநேரங்களில் சில சந்தர்ப்பங்களில் சில விசயங்களை தீர்மானிக்கக்கூடியவர்களாக மாற வேண்டிய தேவை இந்த சமுதாயத்தில் உருவாகியிருக்கிறது. அதையும் உணர்ந்துதான் வீரமணி உங்களை அழைத்து இருக்கின்றார். அமைப்புகளில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன் உறுப்பினர் சேர்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்று சொன்னார்கள். அதுமட்டுமன்றி இது போன்ற பல கருத்தரங்குகளை அமைத்து பேசுங்கள் உங்களுக்குத் தெரிந்த விசயங்களை எவ்வாறு கொண்டு வரலாம் அதோடு சமுதாயத்தில் நடக்கும் கலவரங்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதனை சிந்திக்க வேண்டும். இந்த பகுதியில் பல ஜாதிய கலவரங்களும்  உயிரிழப்புகளும் நடக்கின்றன. எந்த பெண்ணிற்கும் எந்த ஒரு உயிரிழப்பையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் அவர்கள். அப்படியானால் இந்த உயிரிழப்பிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று ஒவ்வொரு பெண்களோடும் சென்று விசயத்தை பேசித் தீர்க்க முடியுமா என்று பாருங்கள். உறுப்பினர் சேர்க்கையில் சேர்ந்து கிளம்புங்கள். நாங்கள் பொது வெளிக்குக் கிளம்புவது.  எத்தகையது என்பதனை நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த புரிதல் வெகு விரைவில் அனைத்து குடும்பத்திற்கும் வரும் காலம்மாறும் என்பதைக் கூறி அனைவருக்கும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

x

No comments:

Post a Comment