Monday, June 29, 2015

மனிதனின் மூன்று வாழ்வு




பயணங்களின் சுவாரசியம் ஊரும், அது சார்ந்த தகவல்கள் மட்டுமல்ல. நம் பார்வையில் அது தந்து போகின்ற அனுபவங்களும்தான்.
.எனது கணவர் மருத்துவத்துறை சம்பந்தமான கான்பிரன்ஸ்க்கு போக முடிவெடுத்தபோது, வித்தியாசமான பேரைக் கேட்டு நானும் உடன் செல்லத் தீர்மானித்திருந்தேன்.
சிங்கப்பூர் வழியாக பாலித்தீவு சென்று இறங்கிய போது இளவெயில் வரவேற்றது.
இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு பாலி. பாலி இந்துத்துவம் என்பது புத்த, இந்து மதங்களின் கலவையாக உள்ளது. சைனா, இந்தியா, ஜாவா தீவுகளின் பாதிப்பினால் உருவான கலவையான இந்து மதமே பாலித் தீவில் உள்ளவர்களுடையது ஆகம இந்து தர்மா என்று அழைக்கப்படுகிறது.இவர்கள் 8 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் ஜாவா தீவு வழியாக வந்த இந்தியர்களாகக் கூட இருக்கலாம் என நம்பப்படுகின்றது மகாபாரத காட்சிகள் நகரின் பிரதான சாலையை சிற்பமாகி அலங்கரிக்கின்றன.  .
விமான நிலையத்தில் இறங்கியதும் பாலித்தீவின் காசு மாற்றிக் கொண்டோம். திடீரென எல்லாரும் லட்சாதிபதிகளாகிப் போனோம். 1 ரூபாய்க்கு 260 ரூபாய் என்றார்கள். 20000 ரூபாய் மாற்றினால் 52, லட்சம் ரூபாய் கையில் கொடுத்தார்கள். மதிப்பில்லாத சைபர்களோடு மல்லுக் கட்டுவதின் சிரமம் அப்பொழுதுதான் புரிந்தது.
சொகுசுப் பேருந்தில் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஒரு பழமையான அதே நேரம் உயிர்ப்புடன் இருக்கும் நகரத்திற்குள் நுழைவது போல் பிரம்மை வருவதை தவிர்க்க முடியவில்லை. பொதுவாக பழமையான நகரமென்றால், அருங்காட்சியகத்திற்குள் அடைபட்ட பழைய வாசனையோடு உயிர்ப்பில்லாத சுவடோடு இருக்கும். ஆனால் இந்த நகரமோ பழமை வாசனையை உயிர்ப்போடு வண்ணங்களோடு வைத்திருக்கிறது. கட்டிடங்கள் புது வர்ணங்கள் வெளுக்காமல் நமை கால இயந்திரத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இழுத்துச் செல்வது போல் உணர்ந்தேன்.
திடீரென காலத்தால் முந்தைய உலகிற்கு நான் போனது போல ஒரு பிரமிப்பை   தோற்றத்தால் மட்டுமன்றி அனுபவங்களாலும் கதைகளாலும் நிரப்பியது பாலித்தீவு விடுதிக்குள் நுழைந்ததும் இனிய அதிராத தந்தி இசை எனை இன்னும் பின்னோக்கி இழுக்கின்றது. விடுதியின் வரவேற்பு முழுக்க பழமை, இயற்கைக் கலைப் பொருட்களாய் நிரப்பப்பட்டிருக்க இரு பெண்கள் பாரம்பரிய உடையணிந்து எங்கள் காதுகளில் நுழைந்து கொண்டிருந்த இசைக்கு நடனமாடுகிறார்கள். நடனமாடிய பெண்கள் உடலிலும் கூட அலங்காரப் பொருட்களாக தென்னை ஓலை போன்ற இயற்கைப் பொருட்களே அதிகம்.
ஓய்வெடுத்துவிட்டு நகரைச்சுற்றிப் பார்க்க கிளம்புகிறோம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நம் வீட்டு மாடக்குழி போல் சிறிய ஆனால் அலங்காரமான கோவில் போன்ற அமைப்பு உள்ளது. தினப்படி வழக்கங்களால் அவர்கள் நம்புகின்ற இந்துத்துவ பண்பாடுகள் சிதையாமல் இன்றளவும், இவ்வளவு சுற்றுலா  நாடாக அந்நாடு மாறிவிட்ட பிறகும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
காலையில் இரு  வகையாக பூஜை செய்கிறார்கள். வீட்டிற்குள் நல்ல தெய்வங்கள் வந்து குடியிருக்கச் சொல்லியும், வாசலுக்கருகில் தீய சக்திகள் உள் வராதிருக்ககோரியும் பூஜை நடத்தப்படுக்கிறது, அரிசி, பூக்கள், பிஸ்கட்டுகள் என எளிமையாக பூஜைகள் நடைபெறுகின்றது. வீட்டுக்குள் பார்க்க முடியவில்லை. கடை வீதிகளுக்கு செல்லும் போது எல்லார் கடையிலும் அன்றைய பொழுது துவக்கத்திற்காக பூஜை நடந்தது. எல்லார் நெற்றியிலும் சிறு அரிசிகள் ஒட்டிக் கொண்டிருந்தது நம்முடைய திருநீறு போல. கடை வீதிகளில் ரொம்பவும் அந்நியோன்யமாக பேசும் மக்கள், “நான் யாரையாவது ஏமாற்றினால் அடுத்த பிறவியில் பிராமணனாய் பிறக்க முடியாது” எனவே நியாயமான விலைதான் என்று சொன்ன கடைக்காரரின் மனோநிலை தந்த அதிர்ச்சியிலிருந்து மீள நெடுநேரம் பிடித்தது.
  இவர்கள் வாழ்வு 3 அடிப்படைகளைக்  கொண்டுள்ளது. 
மனிதன் கடவுளாதல்
மனிதன் மனிதனாதல்
மனிதன் இயற்கையாதல்
மனிதன் கடவுளாதல், அடிப்படையில் நற்செயல்களே நமது வாழ்விற்கு காரணம் என்பதை தொழில் நடக்கும் இடத்தில் கூட நம்புகிறார்கள் என்பதை சொன்ன வசனமிது.
மனிதன் இயற்கையாதலுக்கு எங்களது வழிகாட்டி பயண இடைவெளியில் சொன்ன சம்பவம் பெரும் அனுபவமாயிருந்தது.
பாலி கடலும் கடல் சார்ந்த இடம் மட்டுமல்ல மலையும், மலை சார்ந்த இடமும் கூட, எரிமலைகள் அதிகம் உள்ள இடம். அப்படி ஒரு காட்டிற்குள் பழங்குடியினர் வசிக்கின்றனர். அங்கு நாம் செல்ல அனுமதி கிடையாது. அங்கு ஒரு மரம் உண்டு, மரத்தினருகில் எந்த மோசமான நாற்றமும் இருக்க முடியாது அந்த பழங்குடிகள் இறந்து போனவர்களை அப்படியே மரத்தினடியில் போட்டு விடுவார்கள்   எந்த நாற்றமும் இருக்கவே இருக்காது என்று சொன்னார். மனிதன் இயற்கையாதல் என்பதற்கு அவரது கதை சுவாரசியமானதாக இருந்தது. 
அவர்களுடைய கட்டிடக்கலை கூட தத்துவார்த்தமாகவும் ஆன்மீக அடையாளமோடும்தான் உள்ளது. 3 லோகங்கள் உள்ளது என்ற அடிப்படையில்  சில கட்டிடங்கள் உள்ளது. பூர்லோகா (விலங்குகளுக்கும் அரக்கர்களுக்குமானது) புவலோகா (மனிதனுக்கானது) சுவர்கலோகா (கடவுளுக்கும், தேவதைகளுக்குமானது) அவர்கள் கட்டிடக் கலையில் நிறைய வெற்றிடம் விடுவதை வரவேற்பவர்களாக இருக்கிறார்கள்.
சமஸ்கிருத வார்த்தைகள் அவர்கள் மொழியெங்கும் வாழ்வெங்கும் விரவிக் கிடக்கின்றது. வைசிய, சத்ரிய, சூத்ர, பிராமண பிறப்பை கடுமையாக நம்புகின்றனர். 
சிவன் விஷ்ணு பிரம்மா கடவுள்களின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். காக்கும் கடவுளான விஷ்ணுவின் கோவில்  ஊரின் நடுவிலும், பிரம்மா சிவனின் கோவில்கள் ஊருக்கு இரு எல்லைகளிலும் வைக்கப்படுவதாக சொன்னார் வழிகாட்டி. எந்த கோவிலுக்குள்ளும் சுற்றிப் பார்க்க அனுமதிக்கவில்லை. கோவில் சுற்றுலா தலமல்ல வழிபாட்டுக்குரிய இடம் என்று சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மறுக்கிறார்கள்.
 Tanah lot  என்ற கடற்கரையை ஒட்டியிருந்த இயற்கையிலேயே அமைந்த அந்த கோவிலுக்கு எங்களை அழைத்துச் சென்றார்.  வழி நெடுக கலைப் பொருட்களாலும் இசைக்கருவிகளாலும் நிரம்பிய கடைகள் முளைத்திருக்கின்றன. இசைக்கருவிகள் எல்லாமே சிரட்டை,  வித விதமான மர விதைகள் என மிக வித்தியாசமாக நம்மை ஆச்சரியப் படுத்துக்கிறது  மாலை நேரம் பார்க்க இனிமையான கோவில். மேற்கு கடற்கரையில் உள்ளது ஆனால் கோவிலுக்குள் அனுமதியில்லை என்று சொல்லி விட்டார்கள்.  கடல் நீருக்கு நடுவில் ஒரு பெருங் கற்மலை கிடப்பதை போலுள்ளது. நாங்கள் போயிருந்த நேரம் நீர் வடிந்து கற்மலை வரைக்கும் போக முடிந்தது. சில நேரம் நீர் சூழ்ந்து விடும். அந்த கடல்நீர் அரித்த கற்பாறைக்கிடையில் ஒரு நன்னீர் ஊற்று. புனித நீராக ஓடிக்  கொண்டிருந்தது. அதற்கு அருகில் இருந்த ஒரு குகை போன்ற பகுதியில்  பாம்பை வைத்துக் கொண்டு ஆசீர்வதித்துக் கொண்டிருந்த நபர் இருந்தார். பார்த்துக் கொண்டிருந்த போதே பாரம்பரிய நடனமோடும், இசையோடும், உடையோடும் கோவிலை நோக்கி ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது.

நம்பிக்கைகளாலும் இயற்கையாலும்  நிறைந்த வாழ்க்கை அவர்களது.

No comments:

Post a Comment