Thursday, December 11, 2014

விமரிசனம்

சாகசக் காரிகள் பற்றியவை  கவிதை தொகுப்பு  
ஆண் அடையாளமான வெற்றிகள் 
பெண்ணுடையவை அல்ல
திலகபாமா
இன்றைக்கு கவிதை இலக்கியம் என்பது  மட்டுமல்ல உரையாடல் கூட எதிராளி அதாவது கேட்பவனுக்கு ரசனைக்குள்ளதாய் அல்லது அவனது அனுபவத்திற்குட்பட்டதாய் இருக்கும் போது மட்டுமே பரஸ்பர உரையாடல் நிகழக் கூடியதாய் ஆகிப் போய் விட்டிருக்கின்றது.
புதிய உணர்தல்களை புரிந்து கொள்ளவும் உணர முற்படுவதுமான தருணங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன.
 இப்படியான இடத்தில் இருந்து கொண்டு தான் கவிதைகள் பார்க்கப் பட்டும், பெண்கள் எப்படி எழுத வேண்டும் என்றும் சொல்லப் பட்டுக் கொண்டிருக்கின்றது
2000 த்தில் உங்கள் ( பெண்) உணர்வுகள் எங்களுக்கு புதிது  எழுதுங்களேன் என்று கேட்டவர்கள் , ஒரு இரண்டு தொகுப்பு வந்தவுடன்( அவர்கள் சொன்னதை கேட்டு விட்டதாய் நம்பிக்க கொண்டு)எப்பொழுது பொது வெளிக்கு வருவீர்கள் என்று கேட்கத்  தொடங்குகின்றனர் எப்பவும் அவர்கள் விரும்புகின்ற ஒன்றாகவும் , அவர்கள் எதிர்பாரத ஒன்றாக மாறுகின்ற போது அதிர்வடைக்கின்றவர்களாகவுமே இருக்கின்றனர்
இந்த தளங்களின் இயங்கியலையும் மனதில் கொண்டும் , அதை கடந்த படியும்  தான் நான் தான்யாவின் ”சாகசக்காரி பற்றியவை” கவிதைத் தொகுப்பை வாசிக்க வேண்டியிருக்கின்றது
51 கவிதைகள் கொண்ட தான்யாவின் இத்தொகுப்பு முதல் வாசிப்பில் எனக்கு மிக அந்நியமாய் தெரியத் தொடங்க, என் எழுத்தனுபவத்தில் கவிதை குறித்த என் முன் தீர்மானங்களைப் புரந்தள்ளிவிட்டு வாசிக்க நான் கொஞ்சம் தயாராக வேண்டியிருந்தது. 
”கூடாது போன நம்பிக்கைகளும்
குலாவிச் சிதறிய நேசமும் 
என்னோடு  யுத்தமிட ”  பக்:14
 இன்றெல்லாம்  நம்பிக்கையின்மையின் உணர்வு, யுத்த வன்முறையின் குருதித் தெறித்தல்களாய் நம் முகத்தில் விழுந்த வண்ணமே இருக்கின்றன. துப்பாக்கி முனையை விட சிதைபடும் உணர்வின் முனைகள் நம் வாழ்வை அடிக்கடி பதம் பார்த்து விடுகின்றன தான்யாவின் கவிதைகளில் அந்த உணர்வின் யுத்த வலி நெடுக தென்படுகின்றன.
வழமையாக  என் தொகுப்புகளை வாசிப்பவர்கள் புராணங்களை கடந்தெழுத மாட்டீர்களா என்பார்கள்
 அது பலநேரம் பலமாயும் சில நேரம் பலவீனமாகவும் உணர்ந்துள்ளேன். அந்த பலவீனங்களை  தான்யாவின்  கவிதை ஒன்று மிக அழகாக கடந்து விடுகின்றன
”இப்போதெல்லாம் கனவில் 
கற்களே  குவிந்து கொள்கின்றன
கல்லுக்குள் அடைபட்டு
 காணாமல் போனேன்    பக்: 14
அகலிகை எனும் படிமம் இல்லாமலேயே  கவிதை சொல்ல வந்த உணர்வு நம்மில் ஊடுருவி விடுகின்றது.இதேபோல் கவிதை தொகுப்பெங்கும் நாம் எதிர்பாராத உணர்வுகளை சொல்ல வரும் சம்பவங்களின் பௌதீக மனிதர்களும் பொருட்களும் படிமங்களாய் உறைகின்றார்கள்

”நாளாக வரும் தனிமை
அடக்கிய காமம்
எழுத முடியாத குழந்தையாய்
நகர்கிறது பேனா”    பக்: 18
பேனாவும் குழந்தையும், எழுத முடியா உணர்வின் படிமங்களாய் உருக்கொள்கின்றார்கள்.
அடுத்து 
”மழை மகிழ்ச்சியான  குறியீடு என்கின்றாய்
எனக்கு மழைதனிமையின் குறியீடாய்
  • - - -  - -
பெரியவர்களின் இரசனையின் முன்னால் கவனிப்பாரற்ற
சிறுமியாய் என்னுள் தனிக்கின்றேன்.” பக்: 42
என்ற கவிதை வரிகள்  ஔவையின் 
”யாழோடும் கொள்ளா பொழுதோடும் புணரா
என்று தொடங்கும் பாடலை நினைவு படுத்தியது. தந்தை குழந்தையின் குரலை நம்புவது போல் என் குரலையும் நம்பேன், எனக் கேட்கும் ஔவையின் குரலும், கவனிப்பாரற்று என் குரல் கிடக்கின்றது என சொல்லும் தான்யாவும் ஒரே குரல் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகின்ற போது யதார்த்தம் சுடுகின்றது
நூற்றாண்டுகள் கடந்த பின்னும் , காலங்கள்  மாறி புதுமைகள் வந்து விட்டதாய் நம்பிய பின்னும் அதே வேட்கையை  கேள்வியை சமூகத்தின் முன்னால் அன்றும் இன்றும் வைப்பவர்களாகவே முதல் படி கடத்தலையே செய்து கொண்டிருப்பவர்களாக பெண்கள் இருக்க வேண்டியிருக்கின்றது என்பதை தான்யாவின் இக்கவிதை வரிகள் உரத்து சாட்சியமிடுகின்றன.
 மேலும் ஆணுடைய அடையாளமாய்  முன் மொழிதலாய், வாழ்வாய், தீர்மானங்களாய், வெற்றிகளாய், இருப்பவை எல்லாம் பெண்ணுடையது இல்லை என்பதை  இக்கவிதை அழுத்திச் சொல்லிப் போகின்றது.
அந்தப் புரிதல் ஆண்* பெண், இருவருக்கிடையே சாத்தியமாகின்ற பொழுதுதான் அடுத்த கட்ட திறவுகள் நமக்குப் புலப்படும்
பக்கம் 46 இல்  இருக்கின்ற கவிதை அதிகாரங்களின் முன்னால் மண்டியிட நேருகின்ற ( ஆண் 8 பெண் , தொழிலாளி முதலாளி,குழந்தைகள் பெற்றோர்கள், பலவீனன் பலவான், போரில் வென்றவன் தோற்றவன்) என எல்லாருக்குமான கவிதையாய் இத்தொகுப்பில் குந்தியிருக்கின்றது,
”சிறுவலியும் பொறுக்காத வளர்ந்த உடல்
அங்கலாய்த்துக் கொள்கிறது
வலி தாளாமல் துரோகியாகி விடுவானோ என…

நாளைய குழந்தைகள் காலத்தை உணராத 
துரோகக் கதைகளிலிருந்து 
விடுபடுவார்களா?
என்ற கேள்வியின் வழி நீ, நான் என எல்லாரும் மனித நேயக் கொலைகளைப் பார்த்துக்  கொண்டிருக்கும்  துரோகிகளாகவே அடையாளம் காணப் படப் போகின்றோம் என்று மிரட்டும் இக்கவிதை.
காலம் காலமாக வாழ்வும், காதலும் காமத்திற்குமாக ஆணை எதிர்பார்த்து  மாய்ந்து , காத்திருந்து  வழங்குகிறவளாக இருக்கின்ற போது இறந்தவளாகவும், எடுக்கின்றவளாக மாறும் போதும் பிச்சை கேட்பவளாகவுமே வாழ நேர்கின்ற மனக் கட்டமைப்பில்லிருந்து  விடுபட இன்னும் தொடங்கவே இல்லையோ என நினைக்க வைத்த பல கவிதைககளுக்கு மத்தியில் 
 மேற் சொன்ன கவிதை இத்தொகுப்பிலுள்ள உச்ச கட்ட வெளிப்பாடாக நான் மிக நேசிக்கின்ற கவிதையாக கவிஞர் தான்யாவின் அடுத்த கட்ட கவிதைகள் என்னவாக இருக்கும் என எதிர்பார்க்க வைப்பதுமாக இருக்கின்றது
தலைப்பில்லாத கவிதைகள் குறிப்பிட்டு சொல்லவும் எழுதவும் ஒரு வசதியின்மையைக் கொடுக்கின்றது

வாழ்வும் எழுத்தும் சிந்தனையாக
சிந்தனை எல்லாம் நிகழும் செயலாகவும் வாழ்த்துக்கள்
சாகசக் காரியிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பு இருக்கின்றது.
சாகசக் காரிகள் பற்றியவை( கவிதைகள்
ஆசிரியர் -தான்யா
வடலி வெளியீடு
8ஏ அழகிரி நகர் 4 வது தெரு லத்சுமி புரம்
வடபழனி சென்னை

விலை 50 ரூ

Wednesday, December 10, 2014

ஆசிரியர்கள் 3

9 ஆவது வகுப்புக்குள் காலடி வைத்து காத்திருக்கின்றோம். உள்ளே நுழைகின்ற பாரதமணி டீச்சர் முதல் பார்வையிலேயே எங்களை ஈர்த்தார். நிமிர்ந்த நடை, பார்வையிலேயே அனைவரையும் ஈர்க்கும் கம்பீரம், தொடங்கிய விசயத்தை தடங்களில்லாது, ஒரு வார்த்தையையும் பிசிறில்லாது பேசி முடிக்கும் கம்பீரம், இப்படி எல்லாவற்றிலும் பார்வை, பேச்சு, நடை, உடை என ஒட்டுமொத்த கம்பீரமான பாரதமணி டீச்சர்.
       கதை சொல்லாமல் அறிவுரை சொல்லாமல் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆசைப்பட வைக்கும் செயல். எனது மனம், எப்பவும் இளமையாய் நினைக்க வைக்கும் மன அமைவு என்று எல்லாவற்றுக்குமான எனக்கான ஒட்டு மொத்த முன்மாதிரி பாரதமணி டீச்சர். இரண்டு வருடம் அவரது வகுப்பில் இருந்து இருந்து ஒரு கட்டத்தில் அவராகவே மாறிப் போனேன் என்பதுவே உண்மை.
      இரண்டு வருட வகுப்பில் ஒரு நாள் கூட ஒரு கணக்குப் பாடம் கூட மறதியாகவோ, தவறுதலாகவோ பிழையாகவோச் செய்ததே கிடையாது. ஒவ்வொரு வகுப்பிலும், 60 பிள்ளைகள் இருந்த போதும் கோபப்பட்டு ஒரு தடித்த வார்த்தையும் பேசியது கிடையாது

கவிதை

தலவிருட்சம்

அவன் வேலைகள் 
பூதகணங்களாகித் தெரிந்து தொலைய
அவள் உன் காலடிக் கீழ்
எறும்பாகிப் போயிருந்தாள்


அவன் தடத்தில் 
 மிதி படாமல் தப்பித்தபடி
அவனுக்கான  மழைக்கால உணவுக்காய்
ஊர்ந்தபடியே இருந்தாள்

வீடு மழைக்கால சிறையிருப்பில்
காலியானபோழ்து
அவனை நிரப்பிக் கொள்ள 
லென்சுகள் கொண்டவளை தேடினான்

பிணங்களோடும் புணர்ந்து விட
தயாரான போழ்தில்
தீண்டலில் பெண்ணாகி விட முடியா
அகலிகையாகினாள்

தொட்டவுடன் பெண்ணாக
அவன் இராமனுமில்லை
அவள் கல்லானது சாபத்தாலாலுமில்லை

மரம் கல்லானது
யுகவாழ்வின் பரிணாம வளர்ச்சி
தலவிருட்சமாய் தொட்டு
கண்ணில் ஒத்திக் கொள்ள வேண்டியதுதான்
பூக்கும் காய்க்கும் மரம் என்பது பொய்யாக 

Monday, December 8, 2014

ஆசிரியர்கள்-2

ஹிந்தி டீச்சர்:-
     நான் ஏழாவது வகுப்பிற்கு வந்த போது ஹிந்தி டீச்சர் என்று அழைக்கப்பட்ட தலையெல்லாம் நரைத்து வெள்ள முடியோடு தலைக்கு பின்னால் வளையம் வைத்து கொண்டை போட்டு இருந்த டீச்சர் அறிமுகமானார்கள். இப்பொழுதெல்லாம் அவர் ஹிந்தி டீச்சர் இல்லை. ஆனால் ஹிந்தி பாடத்திட்டத்தில் இருந்த  காலத்தில் வைக்கப்பட்ட பெயர் இந்த பள்ளியிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும் அவருக்கு நின்று போய் விட்டது. இன்று கூட அவரது இயற் பெயர் நினைவுக்கு வராத போதுதான் பெயரையே நாங்கள் சிந்தித்ததில்லை என்று தோன்றிற்று. வளர்த்தியான உருவம், கம்பீரமான நடை, 7,8, ஆகிய மூன்று வருடங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த பெருமை அவரையே சாரும். அவர் கிறித்தவர் எனவே அடிக்கடி நீதிக்கதைகளும், நன்னெறிக் கதைகளும் சொல்லுவார்.  கதை சொல்லுவதற்கு பெயர் போன அவர் எங்களை வெகுவாக ஈர்த்ததில் எங்களுக்கு ஆச்சரியமில்லை. 
 அப்பொழுதெல்லாம் அடிக்கடி தலைவலி என்று நான் கஷ்டப்பட்ட காலம். தலைவலி என்று சொல்லி, கொஞ்சம் விக்ஸ் வாங்கித் தேய்த்துவிட்டு {ஆபீஸில் இலவசமாகத் தருவார்கள்}, பின்னாடி பெஞ்சில் படுத்து தூங்கி விடுவேன். பல நேரங்களில் வகுப்பு பாடங்கள் முடிக்க முடியாமல் போய் விடும். அப்பொழுதெல்லாம் நான் எழுதப் பயந்த காலம். . பாடம் எழுதி, முடிக்க வேண்டுமென்றால் அப்படி ஒரு சோம்பல் வந்து ஒட்டிக் கொள்ளும். இதில் தலைவலியால் எழுத முடியாமல் சேர்ந்த பாடங்கள் வேறு, நினைக்கவே பயம் தரும்.
     அப்பொழுது முனியம்மாள் எனது வகுப்புத் தோழி. அவளும் நானும் எப்பொழுதும் பிரியாமல் இருப்போம்.  என் உயரமொத்த அவள் தாவணி போடுவது, பெரிய பெண் ஆவது பற்றியெல்லாம் தெரிந்தும் தெரியாமலும்  இருந்த என் சந்தேகம் பலவற்றை தெளிவு படுத்தினாள்.
      அப்படியாக ஒருநாள் நான் தலைவலி தாங்காமல் படுத்திருந்த நேரம் அவள் எழுந்து பாமாவின்  நோட்டுப் பாட புத்தகத்தில் நானே எழுதித் தந்திடவா என்று அழுது அனுமதி கேட்கிறாள் ஆசிரியையிடம்.
      உடனே அவளை எழுந்து நிற்கச் சொல்லி நட்புக்கு நல்ல இலக்கணம் இவர்கள்தான் என்று அன்று எல்லார் முன்னிலும் வெகுவாகப் பாராட்டி சிறப்புச் செய்ய, அந்த ஆசிரியை தந்த பெருமையோடு எங்களது நட்புக் காலம் 10வது படித்து முடிக்கும் வரை அதாவது பதினொராவது வகுப்பிற்கு வேறு பள்ளிக்கூடம் சேருவதற்கு நான் புறப்படும் வரை நீடித்தது. இன்று எங்கிருக்கிறாளோ முனியம்மாள் தெரியாது.  ஆசிரியர்கள் சிறந்த நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி பெருமைபடுத்திய பிறகு பலர் தன் தோழியர்க்கு முடியாமல் இருந்த போது எழுதிக் கொடுப்பது மட்டுமே நட்பின் வெளிப்பாடாக செயல்படுத்திக் கொண்டிருந்தனர்.
     அடிக்கடி ஹிந்தி டீச்சர் சொல்லிக் கொண்டிருந்த பல விசயங்களில் நான் 100 சதவீதம் நம்பத் தொடங்கிய விசயம் ஒரு கத்தி வளைய வேண்டும் என விரும்பினால் அதை முழுதாக நம்பு. கத்தி உன் பார்வையிலே வளைந்து உடைந்து போகும் என்பார்.
     நான் செய்ய நினைக்கின்ற ஒவ்வொரு விசயத்தையும் நடந்து முடிந்து விடும் என 100 சதவீதம் நம்பத் தொடங்குகின்ற பழக்கம் ஹிந்தி டீச்சர் பேச்சிலிருந்து தொற்றிக் கொண்டது இன்னும் என் வாழ்வில் தொடர்கிறது. ஒரு விசயம் செய்ய வேண்டும் என்று தோன்றி விட்டால் அது பற்ரி யார் என்ன மாற்ருக் கருத்து சொன்னாலும் நான் எப்படி செய்து முடிக்கப் போகின்றேன் என்பது பற்றியே எனது சிந்தனை இருக்கும். அது என்னுள் தோன்றிய சிந்தனை மேல் நான் வைக்கப் பழகிய நம்பிக்கையின் அழுத்தமாக மாறிப் போனது.

 ஆனால் நம்பிக்கை பற்றி இவ்வளவு பேசிய ஹிந்தி டீச்சர் ஒரு நாள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதுவும் ஓய்வு பெற்ற வயதில் என்ற செய்தி கிடைத்த போது நம்பவே முடியவில்லை. உடையும் என நம்பிய கத்தி கைபிடித்தவரையே பதம் பார்த்துவிட்டது.      

Sunday, December 7, 2014

ஆசிரியர்கள்

   ஆசிரியர்கள் 
ஞானாம்பாள்: 
இன்னமும், கட்டையால் சூழ்ந்த கல் சிலேட்டையும் அதன் கடுமையான முனையால் வாங்கிய அடியையும்  தலையால் மறக்க முடியாது. வலிக்கவே செய்கின்றது. அந்த வீட்டின் முன் 6அடிநீளமுள்ள  வராண்டா அதில் எப்பவும் கிடக்கின்ற மரப் பெஞ்ச் இருள் சூழ்ந்து இருக்கக் கூடிய சமையல் கட்டும் ஒரு மச்சும், கொள்ளை வாசலைக் கொண்டிருந்த நடு ஹால் பழைய வாசம் வீசக் கூடிய சூழல், வராண்டாவில் இருந்த பெஞ்சில் உடையாத வெள்ளை, மற்றும் பல வர்ண சாக்பீஸ்கள், கரும் புள்ளிகளையுடைய பிரம்புக் குச்சி, தென்னை ஓலைகளாலானா விசிறி,  இவற்றோடு காலையில் ஞானம்மாள் அவர்களோடு தனிமையில் இருந்த அறை மாலையானால் மாணவ மாணவிகளின் குரல்களால் நிரம்பி விடும். 
      இலேசான கூனுடன் மூக்கில் நழுவிய கண்ணாடியின் வழியாக உற்றுப்பார்க்கும் கண்கள், குட்டையான உருவம், மெலிசான வெந்நிற தேகம், தேகம் தாண்டி வலிமை உணரவைக்கும் குரல், தென்னை விசிறியின் காம்பைப்பிடித்து விசிறாது மேலே பிடித்து விசிறும் பாங்கு.  70 வயது இருக்கும். வயதை யோசிக்காத பருவம் எனது அப்பொழுது,
    குறிப்பிடப்பட்ட சிலரின் பிள்ளைகள் மட்டுமே இவரது வகுப்புகளில் பங்கு எடுக்க முடியும். என் பிள்ளையை யாரும் அடிக்கக் கூடாது என்பவர்கள் இந்த  டியூசனுக்கு வர முடியாது.  பள்ளிக்கூடத்தில்  எனது  சிலேட்டை  பார்த்தவுடன்  யார் வேண்டுமானாலும்  சொல்லி விடுவார்கள் இது  ஞானாம்மாள்  டீச்சரிடம்  படிக்கின்ற  பிள்ளையோடது என்று.
       ஏனோதானோ என்று இல்லாது முரட்டுக்கட்டை விளிம்புகளுடன் கூடிய எடை கூட இருக்கக் கூடிய சிலேட்டை மட்டுமே அனுமதிப்பார். ஒரு பக்கத்தில் முழுக்க படுக்கைவசத்தில் கோடு போட்டிருக்க வேண்டும். அந்த கோடுகளுக்கு இடையேயான இடைவெளி இவ்வளவு என்பது கூட கறாராக இருப்பார். பின் பக்கத்தில் எண்களை எழுதுவதற்காக நெட்டு வசத்தில் கோடுகள் இருக்க வேண்டும். கல் சிலேட்டில் ஆணி வைத்து கோடு போட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளிலும் வீட்டிலிருந்தே சிலேட்டை கழுவி துடைத்து எடுத்துப் போயிருக்க வேண்டும். முந்தின நாள் எழுதிப் பார்த்த பாடங்கள் அறிந்தும் அறியாமலும் சிலேட்டில் இருக்குமானால் அன்று நான் போட்டுப் போயிருந்த நல்ல சட்டை பாழாகிப் போய் விடும். 
   என்னைக் கோபத்தோடு பார்க்கின்ற போது, பக்கத்தில் இழுத்து வயிற்றுப் பகுதியில் கை வைத்து கிள்ளுவார். அவரிடம் படித்துக் கொண்டிருந்த காலங்களில் அடி வயிறு முழுக்க பிறை பிறையாக காயங்கள் இருந்து கொண்டே இருந்தன. இன்றைக்கும் ஞாபகம் வருகின்றது தொப்புளைச் சுற்றி பிறை வடிவத்தில் நிறைய தழும்புகள், அவ்வளவும் விரல் நகங்களின் பதிதல்கள். நினைத்துப் பார்க்கவே அச்சமூட்டும். ஆனால் இதற்கும் அப்பால் ஒரு அன்பும், கரிசனமும் அந்த ஆசிரியையின் பேரில் இருக்கவே செய்தது. 
சிலேட்டில் எழுதிய பாடங்களுக்கு கலர் சாக்பீஸில் அவர் வழங்குகின்ற கௌரவம் இன்னுமும் இனிக்கிறது. அச்சடித்தாற்போல் கையெழுத்து, அன்றைக்கு பாடங்களை அன்றைக்கே  படித்து எழுதிப் பார்க்க வைத்து விடுவது, கேள்வி பதில்களை மட்டுமல்லாது  பாடப் புத்தகங்களை  வாசிக்க வைப்பது இவையெல்லாம் ஞானாம்பாள் ஆசிரியையின் சிறப்பம்சங்கள். அதற்கு நாங்கள் கொடுக்கின்ற விலை பிரம்படி, விசிறிக் காம்பால் அடி, இப்படி பலதாக இருந்தது.
  அந்த ஊர் பெரிய மனிதர்களின் convent  குழந்தைகள் விடுமுறையில் தமிழ் படிக்க அவரிடம் வந்து சேர்வார்கள். வாயிலும் மனதிலும் வராத தமிழ் அவர்கள் எழுத்தில் தறிக்கெட்டு தாண்டவமாட கால்களுக்குள் இட்டு வெளியேறமுடியாமல் அடைத்துக் கொண்டு அவர்விடுகின்ற அடி பார்ப்பவரை கண்கலங்க வைக்கும். இன்றைக்கெல்லாம் அப்படி நடந்தால் கேஸை போட்டு விடுவார்கள். பெற்றவர்கள் அவ்வளவு அடிக்கப்புறமும் ஊர் பெரிய மனிதர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது டியூசனுக்குச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கெஞ்சினார்கள் என்றால் இன்று யாரும் நம்பமாட்டார்கள்.

என் கையெழுத்து அவர் பெயரை பலரை உச்சரிக்க வைக்கும். பள்ளிக்கூட ஆசிரியர்கள் அனைவரும் அவருடைய மாணவி என்றால் ஒரு மரியாதை காண்பிக்கத் தொடங்கி விடுவார்கள்.
கருங்கல் குச்சி இல்லாமலவர் வேறு குச்சியை வைத்து எழுத அனுமதிக்கவே மாட்டார். தென்னை ஓலை விசிறி எப்பவும் அவர் கைகளில் இருக்கும். சில நேரம் விசிற சில நேரம் அடிக்க, விசிறிக் காம்பில் அடிபட்டு சிவப்பு வரித்தடங்களோடு வீடு வந்திருக்கிறேன் பலநேரம்.
       ஞானாம்மாள்  டீச்சருக்கும்  தண்ணிகாட்ட ஒருவன் வந்தான். என் தம்பி, வந்தவுடன் டீச்சருக்கு கண்டிசன் போடுவான். என்ன என்ன பாடம் படிக்கனும் எழுதனும்னு சொல்லுங்க என்று.
     அவரும் கணக்கு, தமிழ், ஆங்கிலம், அறிவியல், புவியியல், வரலாறு என்று எல்லா பாடத்திலும் அன்றைக்கு நடத்தினதை எடுத்து படித்து எழுதிக் காட்ட வேண்டும் என்று சொல்லி முடிக்கும் முன்னரே தயாராகிவிடுவான். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமையே எழுதி முடித்து விட, இன்னும் இரண்டு கணக்கு செய்து காண்பிக்கலாமே என்று டீச்சர் கேட்க இல்லை , நீங்கள் சொன்னதை நான் செய்திட்டேன் அவ்வளவுதான் என்று கறாராக சொல்லிவிடுவான்.


ஞானம்மாள் டீச்சர் அவருடைய உறவுகள் நட்புகள் என்று யாரையுமே பார்த்ததில்லை. அடிக்கடி அவர் வாயில் நழுவி வந்து கொண்டே இருக்கும் பெயர் சாந்தாக்கா. அவர் நம்பும் ஒரே நபர் அவர்தான். சாதமா, புளிக்காத தயிரா, ஊறுகாயா எது வேண்டுமானாலும் எங்கள் கால்கள் நடக்கும் சாந்தாக்கா வீட்டிற்கு. 
பக்கத்து வீட்டார்களுடன் ஒன்ற முடியாது . டீச்சர் எப்பவும் அவர்கள் வெறுப்போடு தன்னைப் பார்ப்பதாய் சொல்லிக் கொண்டே இருப்பார், சூனியம், செய்வினை வைப்பது போன்றவற்றில் நிறைய நம்பிக்கை  அவருக்கு இருந்தது.
     சுவரெல்லாம் கருப்பு மை எப்பவும் தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அதைத் தெளித்தவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றும் கூறுவார். அப்படித் தெளித்திருப்பதால்  தன் வாய் முழுக்க  புண்ணாகி விட்டதாகவும், சாப்பிட முடியவில்லை எனவும் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய இருண்ட மச்சு என்னை எப்பவும் பயமுறுத்தும் ஒன்றாகவே இருந்தது. தனிமைக்கு வாசனை என்று ஒன்று இருந்தால் அது இப்படியானதாகத்தான் இருக்க வேண்டும்
   ஐந்தாம் வகுப்போடு அவர்களிடம் படிப்பது நின்று போனது. நான் கல்லூரி படித்த காலத்தில் எப்பவாவது  விரும்பிப் போய் அவரைப் பார்த்து வருவதாகவே எங்கள் சந்திப்பு மாறிப் போனது. நான் கல்லூரி படித்த காலத்தில் எனக்கு அம்மா, அப்பா அனுப்பிய கடிதமொன்று அந்த ஆசிரியை இறந்து போன தகவலோடும் வந்தது. 
    காலம் எங்களிடமிருந்து அவர்களை அடித்துக் கொண்டு போனது. தொலைந்து போன கல்சிலேட்டும் கூர் தீட்டிய கல்குச்சியும் நினைவுக்கு வருகின்ற போதெல்லாம் அந்த வயதான ஆசிரியையின் அன்றைய மனநிலை இன்றைக்குத்தான் கொஞ்சம் புரிகின்ற மாதிரித் தெரிகின்றது.  தாயும் தந்தையுமற்ற தம்பி தங்கைகளுக்காக  திருமணத்தைத் தள்ளிப் போட்டு போட்டு பிறகு அது வாய்க்காமல் போன காலம் அவரது. தந்தையின் சொத்துக்களை உறவினர்கள் எடுத்துக் கொண்டதால் எழுந்த பொருளாதாரத் தனிமை, மனிதர்களின் மேல் விழுந்த அவ நம்பிக்கை, உடன் பிறப்புகளுக்காக வாழ்ந்திருந்த போதும், என்றுமே நான் அவரோடு இருந்திருந்த காலங்களில் யாருமே அவரை வந்து பார்த்ததில்லை எவ்வளவு தவித்திருக்கும் அந்த முதுமையின் தனிமை அதிலும் பெண்மையின் தனிமை, எல்லோரின் பெயரிலும் ஒரு அவ நம்பிக்கை வைத்துக் கொண்டு நம்பிகையற்ற மனநிலையில் பகிர்ந்து கொள்ள யாரும் அற்ற தனிமையில் ஒரு பெண்னின் வாழ்வு என்பது எத்தகைய வன்முறை என்பது இப்பொழுது வலியோடு புரிகிறது.

ஞானாம்பாள் டீச்சருக்குப் பிறகு  எந்த டியூசனும் கிடையாது. படிக்கின்ற பிள்ளை வகுப்பில் நடத்துக்கின்ற பாடத்திலேயே படித்து விட வேண்டும் என்பது என் அப்பாவின் கொள்கை.