Wednesday, July 15, 2015


பெருங்காமம் பூக்கின்றது

நான்கு தசாப்தங்கள்

நகன்று விட்டதின் அடையாளத்தை 
அவள் முந்ந ரை சொல்லிற்று

முதலிரண்டு தசாப்த உறவுகள்
வெளுத்து விட்ட  கருமுடியாய்
காணாமல் போயிருந்தனர்
சிலநேரம் பௌதீகமாகவும்
பலநேரம் பௌதீகமாகவும்

இருபது வயது இளைஞன்
திடீரென அம்மாவாகி
எனக்கொருநாள் 
நண்டூறுது நரியூறுது சொன்னபோது
 பூட்டியிருந்த சிரிப்பு முகமூடிகள்
உதிர்ந்து
சிரிப்பு  முதல் பூவாய்
பூத்து வாசம் வீசியது

பசியறிந்து உணவை 
ஊட்டிய போது அம்மா
இளைஞனுக்குள் வந்திருந்தாள்
அவன் அம்மாவாகிப் போனதை 
புரிய வைக்க முடியாமல் போன
அவஸ்தையிலும்
விழுங்கிய உணவு
கண்ணன் கைப்பருக்கையாய் 
எல்லாவற்றையும் நிரப்புகின்றது

கண்ணனை கட்டி அணைக்கின்றேன்
காதல் உதிர்ந்து
அம்மாவின் முலை ஈந்த 
பெருங்காமம் தீயாய் பூக்கின்றது

தாத்தனின் தழுவலில் இருந்த 
அவன் அம்மா முகம்
தங்கையின் சிரிப்பு
காதலியின்  மீண்டுமொரு பிறப்பு
எல்லாம் தீப்ப்பூவின் வாசத்தில் 
வெளிச்சமாகிக் கொண்டிருந்தது



Friday, July 10, 2015

நிராகரிப்பின் நிறைவில்

நிராகரிப்பின் வலியை
அந்த குளம் தின்று கொண்டே இருந்தது

தாமரைகள் பிடுங்கப் பட்டு
தனதாயில்லாது போனதொருநாள்
மீன்கள் பிடிக்கப் பட்டு
துள்ளியபடி விலையாகின
குளித்து கரையேறினர்
பெண்டு பிள்ளைகளும்

நிலவு ஒரு இரவில் மின்னித் தெரிகையில்
 கலங்கியிருப்பதாக கூசாது 
குற்றவிரல் நீட்டிப் போனார்கள்

வானம் பொய்த்த போது 
ஏய்த்து விட்டதாக  தூர் வாரினார்கள்
கருமேகம் அழுதொருநாள் தீர்த்த போது
மடை உடைந்து ஊரைவெள்ளம் அணைக்க
நான் காவு வாங்கியதாக
என் நீர் நனைத்த நாவுகளே பேசின

எல்லா நிராகரிப்புக்கும் சேர்த்து
 ஒரு நாள் அழுது தீர்த்த போது

நிறைந்தமைக்காக மகிழ்ந்திருந்தது ஊர்

நன்றி



நீ எடுத்துச் சென்றவைகளுக்கு
நன்றி சொல்லிக் கொண்டிருந்தாய்
நான் எடுத்தவற்றை 
அடையாளம் சொல்லவும் முடியாமல்
நன்றியுமில்லாமல்
நனைந்த படி குளிரில் விரைக்கிறது
வாழ்வு
எப்பவாவது கை பற்றி
கதகதப்பில் உணர்த்திவிட
முயலுகிறேன்

நான் உன்னில் எடுத்ததை