நிராகரிப்பின் வலியை
அந்த குளம் தின்று கொண்டே இருந்தது
தாமரைகள் பிடுங்கப் பட்டு
தனதாயில்லாது போனதொருநாள்
மீன்கள் பிடிக்கப் பட்டு
துள்ளியபடி விலையாகின
குளித்து கரையேறினர்
பெண்டு பிள்ளைகளும்
நிலவு ஒரு இரவில் மின்னித் தெரிகையில்
கலங்கியிருப்பதாக கூசாது
குற்றவிரல் நீட்டிப் போனார்கள்
வானம் பொய்த்த போது
ஏய்த்து விட்டதாக தூர் வாரினார்கள்
கருமேகம் அழுதொருநாள் தீர்த்த போது
மடை உடைந்து ஊரைவெள்ளம் அணைக்க
நான் காவு வாங்கியதாக
என் நீர் நனைத்த நாவுகளே பேசின
எல்லா நிராகரிப்புக்கும் சேர்த்து
ஒரு நாள் அழுது தீர்த்த போது
நிறைந்தமைக்காக மகிழ்ந்திருந்தது ஊர்
No comments:
Post a Comment